ஒரு தாயிடம் வளரும் குழந்தைக்கும்; தந்தையிடம் வளரும் குழந்தைக்கும் என்ன வேறுபாடு?
'சினிமா' என்ற சமுத்திரத்தில் மூழ்கி முத்தெடுக்கும் இயக்குநர், சமுத்திரக்கனி ஆவார். நடிப்பு, இயக்கம் என இருவழிப்பாதையில் பயணிப்பவர் தற்போது இயக்குநர் தாமிரா இயக்கியுள்ள "ஆண் தேவதை" படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் வரும் ஜனவரி மாதம் திரைக்கு வெளிவர இருக்கிறது.
இப்படம் குறித்து இயக்குநர் தாமிரா பேசுகையில்,
"நல்லியல்புகள் கொண்ட எல்லோரும் தேவதையே. படம் பார்க்கும்போது, சமுத்திரக்கனியின் கதாபாத்திரமான ’இளங்கோ’ தான் உங்கள் மனதை ஆக்கிரமிக்கும். மோனிகா, கவின் பூபதி ஆகிய இரண்டு குழந்தைகள் தான் இந்தப்படத்தின் ஜீவன் என்று சொல்லலாம். சமுத்திரக்கனி, ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், இசையமைப்பாளர் ஜிப்ரான், எடிட்டர் காசி விஸ்வநாதன், ஆர்ட் டைரக்டர் ஜாக்கி என என்னைச்சுற்றி இருந்த நல்ல நண்பர்களுடன் இணைந்து படம் பண்ணுவது ரொம்ப எளிதாக இருந்தது.
வாழ்வதற்காக வேலை செய்கிறோமா..? இல்லை வேலை செய்வதற்காக வாழ்கிறோமா..? இந்த புள்ளியில் இருந்துதான் கதை துவங்குகிறது. இன்றைய நகரமயமாக்கல் சூழலில் ஒரு தாயிடம் வளரும் குழந்தைக்கும்; தந்தையிடம் வளரும் குழந்தைக்கும் என்ன வேறுபாடு? வீட்டில் எடுக்கும் முடிவுகளில் குழந்தைகளின் கருத்தையும் கேட்கவேண்டும். அதை இதில் அழுத்தமாக சொல்லியிருக்கிறோம்”
என்றார்.
’ஜோக்கர்’ படத்திற்கு பிறகு, நாயகி ரம்யா பாண்டியன் இப்படத்தில் சமுத்திரக்கனியின் ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் ராதா ரவி, இளவரசு, காளிவெங்கட், அறந்தாங்கி நிஷா, சுஜா வாருணி, ஹரிஷ், ராமதாஸ் உள்பட பலர் நடித்துள்ளார்கள். 'சைல்ட் புரொடக்சன்ஸ்' உடன் இணைந்து 'சிகரம் சினிமாஸ்' சார்பாக இயக்குநர் தாமிரா இப்படத்தைத் தயாரிக்கவும் செய்துள்ளார்.
செய்தி :விஜய் ஆனந்த்