தூத்துக்குடி மக்களுக்காக இயக்குனர் பா.ரஞ்சித் நாளை உண்ணாவிரத போராட்டம்...!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 10திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்.
தற்போது இந்த சம்பவத்தை கண்டித்து இயக்குனர் பா.ரஞ்சித் நாளை சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் உண்ணாவிரத போராட்டம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
இது சினிமா தொடர்புடையவர்களால் நடத்தப்படுகிற போராட்டம் அல்ல என்றும், பா.ரஞ்சித் அங்கம் வகிக்கும் தமிழ், கலை, இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் சார்பில் நடக்கிறது என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு, அனுமதி கேட்டு நேற்று போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பா.ரஞ்சித் மனு தொடுத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இவர்..." தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிசூடு சம்பவம் எங்களை மிகவும் வேதனை அடையச் செய்துள்ளது. ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்காக ஓட்டு போட்ட மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுவது எந்த விதத்தில் நியாயம்.
இந்த சம்பவம் இனிமேல் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது என்ற அச்ச உணர்வை ஏற்படுத்துவதற்காக காவல்துறையால் நடத்தப்பட்டதாக தெரிகிறது.
இதற்கு காவல்துறை மத்திய - மாநில அரசுகளை கண்டித்து, ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டத்தில் தமிழ் உணர்வு உள்ளவர்கள் கலந்துக்கொள்ளட்டும் என்று கூறியுள்ளார்.