சிம்புவின் நூறாவது பாடலை நீங்க கேட்டீங்களா? அட என் ஆளோட செருப்ப காணோம்னு தொடங்குமே!!!
ஐ எம் அ லிட்டில் ஸ்டார்! ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்! என்று குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் தனது அறிமுகத்தை தொடங்கி தற்போது ஹீரோ. இசை அமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பல்வேறு வடிவங்களை எடுத்தவர் சிம்பு.
தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை வைத்துக்கொண்டு விதவிதமான கதை களங்களை ரசிகர்களுக்கு காண்பித்தவர்.
சிம்பு இதுவரை 99 பாடல்களை பாடியுள்ளார். அவரது 100-வது பாடல் வெளியாகியுள்ளது.
புதிய கீதை, கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை போன்ற படங்களை இயக்கியவர் ஜெகன்நாத். இவர் சமீபத்தில் இயக்கிவுள்ள படம் “என் ஆளோட செருப்ப காணோம்”.
இந்தப் படத்திற்கு இஷான் தேவ் இசை அமைத்துள்ளார். விஜய் சங்கர் எழுதிய “என் ஆளோட செருப்ப காணோம். அதை தேடி தேடி அலையுறேன் நானும்" என்றுத் தொடங்கும் பாடலை சிம்பு பாடியுள்ளார்.
இதுகுறித்து பாடகர் சிம்பு கூறியது:
“பாடல்கள் பாடுவது எப்போதுமே எனது ஆர்வம், என் தந்தையிடம் இருந்து எனக்கு வந்தது. பெரும்பாலான சூப்பர் ஹிட் பாடல்களை நான் பாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. 100 பாடல்களை பாடியிருக்கிறேன் என்பதை உணரவே இல்லை. இந்தப் பயணத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், உடன் பாடிய பாடகர்கள் ஆகியோருக்கு என் மனதார நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் எப்போதுமே கற்றுக் கொள்ளும் ஆர்வம் உடையவன், எல்லா இசையமைப்பாளர்களுடனும் வேலை செய்திருப்பது இசையில் பரந்த மற்றும் பெரிய புரிதலை கொடுத்திருக்கிறது. எந்த அவதாரத்தில் நான் இருந்தாலும் என்னை ஏற்றுக் கொண்டு ஊக்கப்படுத்தும் என் ரசிகர்களுக்கு நன்றி.
என்னை பொறுத்த வரையில் 100 என்பது சாதாரண ஒரு நம்பர் தான், ஆனாலும் இந்த நேரத்தில் பெருமையாக உணர்கிறேன். சினிமா என்பது என் வாழ்க்கை மற்றும் உயிரோடு கலந்த ஒன்று. எனக்கான தனி ஒரு இடத்தை அடைய மிகவும் கடுமையாக உழைப்பேன்” என்று நெகிழ்ந்தார் சிம்பு.