ஆம்புலன்ஸ் தாமதம்... பிரசவத்தின்போது நடிகையும் அவரது பிறந்த குழந்தையும் உயிரிழப்பு... சோகத்தில் மூழ்கிய திரையுலகம்..!
பிரசவத்தின் போது குறிப்பிட்ட நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் மராத்தி நடிகையும், அவரது பிறந்த குழந்தையும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரசவத்தின் போது குறிப்பிட்ட நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் மராத்தி நடிகையும், அவரது பிறந்த குழந்தையும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல மராத்தி ஹீரோயின் பூஜா ஸுஞ்சார் (25). இவர் சில படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். அவர் கருவுற்ற நிலையில் திரையுலகில் இருந்து விலகி மகாராஷ்டிர மாநிலம் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரில் தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு 2 மணியளவில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவருக்கு பிறந்த குழந்தை சில நிமிடங்களிலேயே இறந்தது. அடுத்து சில நிமிடங்களிலேயே ரத்த போக்கின் காரணமாக பூஜாவின் உடல்நிலையும் மிகவும் மோசமடைந்தது.
இதனையடுத்து, மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக அவரை ஹிங்கோலி சிவில் ஹெல்த் செண்டருக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர். ஆனால் அவசரத்துக்கு ஒரு ஆம்புலன்ஸ் கூட கிடைக்காத நிலையில் பரிதவித்துத் தேடிய உறவினர்களுக்கு வெகுநேரத்துக்குப் பின் தனியார் ஆம்புலன்ஸ் ஒன்று கிடைத்தது. அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற பின்னர் மருத்துவர் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினார்.
இதுதொடர்பாக உறவினர்கள் கூறுகையில் உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைத்திருந்தால் பூஜா உயிர் பிழைத்திருப்பார் என்று கண்ணீர் மல்க வேதனையும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.