வழிபாட்டுத் தலங்களை கொச்சைப் படுத்துகிறாரா? விஜய் மீது வழக்கு பதிவு செய்ய போலீசில் புகார் !!
விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தில் வழிபாட்டுத் தலங்களை கொச்சைப்படுத்தும் வகையில் வசனம் பேசியிருப்பதாகவும், அதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்து தண்டனை நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தடைகளைத் தாண்டி நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் தீபாவளியன்று வெளியானது. வசூலில் சக்கைப்போடு போடும் இந்த திரைப்படத்தில் ஜிஎஸ்டி, டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய பாஜக அரசின் திட்டங்களை தாக்கி வசனங்கள் இடம் பெற்றுள்ளன.
இதற்கு தமிழக பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என தொடர்ந்து அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் பாஜக தலைவர்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த், பார்த்திபன், ஜி.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்டோர் மெர்சல் படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், என்பவர், அண்ணாநகர் போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில், மெர்சல் திரைப்படத்தில் வழிபாட்டுத் தலங்களை கொச்சைப் படுத்தும் வகையில் வசனங்கள் உள்ளன என்றும், எனவே நடிகர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.