20 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்வு...பொதுமக்கள் அதிருப்தி...!
20 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது.
கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு, கடந்த 20 நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தாமல் ஒரே விலையில் இருந்து வந்தது. ஆனால் அப்போதே கணிக்கப்பட்டது என்ன வென்றால், தேர்தல் முடிந்த உடன் பெட்ரோல் டீசல் விலை கணிசமாக உயர்த்தப்படும் என்பதே...
பெட்ரோல், டீசல் விலையில் தினமும் மாற்றம் இருந்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலை மாற்றப் படவில்லை.
இந்நிலையில், இன்று காலை ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 18 காசு உயர்ந்து 77 ரூபாய் 61 காசாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை 23 காசு உயர்ந்து 69 ரூபாய் 79 காசாகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத் தேர்தலை முன்னிட்டே பெட்ரோல்,டீசல் விலையில் தினசரி மாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக பலதரப்பினரும் புகார் கூறி வந்த நிலையில், பொதுமக்கள் நலன் கருதியே மாற்றம் செய்யாமல் இருந்ததாக எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் கர்நாடக தேர்தல் முடிவடைந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்திருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.